Wednesday, May 24, 2023

அமைதி - Peace

 *அமைதி என்றால் என்ன*?


*ஒரு குட்டி கதை* .


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.


ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். 


இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.


மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். 


அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். 


ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். 


ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. 


மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.


மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். 


பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. 


இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.


ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. 


அதுமட்டுமா இடியுடன் 

மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. 


இது அமைதியே அல்ல. 


சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. 


இந்த ஓவியத்தை வரைந்தது யார்?


சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். 


இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. 


ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. 


ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?.என்று மன்னன் கேட்டான்.


அதற்கு ஓவியத்தை வரைந்தவர் மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி! என்று கூறினார்.


அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் 

இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!! என்றார்.


சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் .


கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.


அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித 

பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.


அது ஒரு வாழ்க்கையும் அல்ல.


 ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, *நிச்சயம் ஒரு நாள் விடியும்,* என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.


எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.


சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...