கமல் ஹாசன் அவர்களின் "மனித வணக்கம்" கவிதை வரிகள் ரசிக்க..
தாயே, என் தாயே !
நான் உரித்த தோலே
அறுத்த கொடியே
என் மனையாளின் மானசீக சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா !
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று.
புரியாத வரியிருப்பின் கேள் !
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமையா, ஓ தமையா !
என் தகப்பனின் சாயல் நீ.
அச்சகம் தான் ஒன்று இங்கே
அர்த்தங்கள் வெல்வேறு.
தமக்காய், ஓ தமக்காய் !
தோழி, தொலைந்தே போனாயே?
துணை தேடி போனாயே?
மனைவி, ஓ காதலி !
நீ தாண்டா படியெல்லாம்
நான் தாண்ட குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை.
மகனே, ஓ மகனே !
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறு பிறப்பே
மரண சௌகர்யமே, வாழ் !
மகளே, ஓ மகளே !
நீயும் என் காதலியே
எனதம்மை போல
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா !
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா !
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தை கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன் அம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா !
என் சமகால சகவாசி, வாசி.
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் என தோன்றின், பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம், நாளை உன் வரியில் நானும் தெரிவேன்.
No comments:
Post a Comment