Wednesday, May 14, 2025

நண்பா, ஓ நண்பா !

 கமல் ஹாசன் அவர்களின் "மனித வணக்கம்" கவிதை வரிகள் ரசிக்க..


தாயே, என் தாயே !

நான் உரித்த தோலே

அறுத்த கொடியே

என் மனையாளின் மானசீக சக்களத்தி, சரண்.


தகப்பா, ஓ தகப்பா !

நீ என்றோ உதறிய மை

படர்ந்தது கவிதைகளாய் இன்று.

புரியாத வரியிருப்பின் கேள் !

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.


தமையா, ஓ தமையா !

என் தகப்பனின் சாயல் நீ.

அச்சகம் தான் ஒன்று இங்கே

அர்த்தங்கள் வெல்வேறு.


தமக்காய், ஓ தமக்காய் !

தோழி, தொலைந்தே போனாயே?

துணை தேடி போனாயே?


மனைவி, ஓ காதலி !

நீ தாண்டா படியெல்லாம்

நான் தாண்ட குமைந்திடுவாய்

சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை.


மகனே, ஓ மகனே !

என் விந்திட்ட விதையே

செடியே, மரமே, காடே

மறு பிறப்பே

மரண சௌகர்யமே, வாழ் !


மகளே, ஓ மகளே !

நீயும் என் காதலியே

எனதம்மை போல

எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா?


நண்பா, ஓ நண்பா !

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்

இவ்விடமும் அவ்விதமே.


பகைவா, ஓ பகைவா !

உன் ஆடையெனும் அகந்தையுடன்

என் அம்மணத்தை கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே

உன் அம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்

நீ வைத்த துணிக்கடைகள்

நிர்மூலமாகி விடும்

நிர்வாணமே தங்கும்.


வாசகா, ஓ வாசகா !

என் சமகால சகவாசி, வாசி.

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் என தோன்றின், பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.

ஆம், நாளை உன் வரியில் நானும் தெரிவேன்.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...