இது பத்து வருடங்கள் முன்பு கீதப்ப்ரியன் பளாக்கில் பாட்டாகவே படித்த பிரதி!!!
இப்போதும் இப்படத்துக்கு உள்ள வீச்சு அளவிடமுடியாதது.
முழுக்க ஸ்பாய்லர் படம் பாரத்தவர்களுக்கு மட்டுமானது.
த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் The Shawshank Redemption[1994]
"Fear can hold you prisoner. Hope can set you free."
"பயம் உன்னை சிறைபிடிக்கும்,நம்பிக்கை உன்னை சிறை விடுவிக்கும்" இது தான் படத்தின் டேக் லைன்.
===============================
1994 ஆம் ஆண்டு,ஃப்ரான்க் டாரபான்ட் இயக்கத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபென் கிங்கின் “ரீட்டா ஹேவொர்த் அண்ட் ஷஷான்க் ரிடெம்ப்ஷன்” என்னும் அற்புதமான நாவலைத் தழுவி,வெளிவந்த “டிராமா” வகை உணர்ச்சி காவியம்.வாழ்வில் உத்வேகம் தரும் படங்களின் வரிசையில் இப்படத்துக்கே முதலிடம்.வல்லவன் வாழ்வான் என்பதை உரக்க சொன்ன படம்.IMDB ல் இது பெற்றுள்ள மதிப்பெண்=9.2/10
இந்த படம் வெளியாகி பதினைந்து வருடம் கழித்துப் பார்த்ததை எண்ணி ஆறாத வேதனைப்பட்டேன். மிகப்பெரிய இழப்பே. "த ஷஷாங்க் ரெடேம்ப்ஷன் "(ஷஷாங்கில் தண்டனைக்காலம்) வட அமெரிக்காவின் 180 வருட பழமை வாய்ந்த ஆறடி கனமுள்ள,சுவர் கொண்ட காற்று கூட புக முடியாத ஒரு கொடுஞ்சிறை. உள்ளே வந்தால் நரகம் தான்.அரக்கத்தனமான சிறை அதிகாரிகள்.உள்ளே உலவும் இன வன்முறையாளர்கள். ஓரினச் சேர்க்கையாளர்கள்.என்று.சாமானியனால் தாக்கு பிடிக்க முடியாத கொடும் சூழல்...
இந்த கதை 1947 ஆம் ஆண்டு துவங்குகிறது:-
”ஆண்டி டூப்ரேன்” (tim robbins)என்ற வங்கி அதிகாரி தன மனைவியை கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருக்கும் போது இருவரையும் சுட்டுக்கொன்றதாக வழக்கு நடந்து,அவருக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்கள் வலுவாக , இருந்தமையால் செய்யாத குற்றத்திற்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க ஷஷாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார்.உள்ளுக்குள் குடைச்சல். தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்ல நினைத்தது உண்மை,ஆனால் கொலையை தான் செய்யவில்லை, யார் செய்திருப்பார்? தெரியாது. மனதுக்குள் குமைகிறார்.
சிறைக்கு வந்தவர் "ரெட்"(morghan freeman)என்னும் 20 வருட தண்டனையை அங்கு கழித்த சக கைதியுடன் நண்பனாகிறார். ரெட்டுக்கு சிறையில் உள்ள சந்து பொந்து அனைத்தும் அத்துப்படி,கைதிகள் என்ன பொருள் கேட்டாலும் வெளியில் இருந்து வரவழைத்து தன் கமிஷன் 20 சதம் மேலே வைத்து விற்கும் தந்திரமும் அத்துப்படி.இவரிடம் டூப்ரேன் பத்து டாலர் தந்து ஆறு அங்குலம் உயரமுள்ள சிறிய "ஜாக்ஹாம்மர்" கேட்டு வரவழைக்கிறார். தனது சிற்பம் குடையும் வடிக்கும் பொழுது போக்கிற்கு என்று சொல்லுகிறார். அதைக்கொண்டு பல அறிய கல்லால் ஆன பொக்கிஷங்களை வடிக்கிறார்.
பின்னர் அப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "rita hayworth" நடித்த கில்டா என்னும் படம் காட்டப்பட, அவளின் மேல் மையலுற்றவர் ரீட்டாஹேவொர்தின் "a0" அளவு போஸ்டரும் ரெட் மூலம் வரவழைக்கிறார்.அதை தன் அறை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.ஓய்வு நேரங்களில் சிறையில் தரப்பட்ட பைபிளை படிக்கிறார். பைபிளும் கையுமாகவே காணப்படும் இவரை சிறை அதிகாரிகளுக்கும் நிரம்ப பிடிக்கிறது.இவரிடம் சிறை வார்டன் நார்ட்டன் பைபிளில் இருந்து கேள்விகள் கேட்க ,இவர் அருமையாய் அதற்கு பதிலுறைக்க,நார்ட்டன் இவரை மெச்சுகிறார்.
1949 ஆம் வருடம் சிறைக்கு உள்ளேயே இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு கூரையில் தார் பூசும் வேலைக்கு போகையில்,சிறை அதிகாரி "ஹாட்லீ" நாட்டின் வருமான வரியை குறை கூறி அங்கலாய்த்து பேசுவதை காண நேரிடுகிறது.இவருக்கு வரி ஏய்ப்பு கைவந்த கலை ஆதலால் இலவசமாக வலிய போய் வரி ஏய்ப்பு ஐடியா கொடுத்து,மயிரிழையில் உயிர் பிழைக்கிறார்.இதற்கு பலனாக அவர்கள் சகா அனைவருக்கும் பீரும் ,சிறிது சுதந்திரமும் கிடைக்க வழி செய்கிறார்.இதன் மூலம் இவரின் நட்பு வட்டம் மேம்படுகிறது.இவர் தான் வாழ்வில் பட்ட பாடத்தால் குடிப்பதை விட்டு விட்டதால் தன பங்கு பீரையும் சகாக்களுகே கொடுக்கிறார்.
ஆனால் சிறை வாழ்வில் ஒரு அவமானமாக அங்கு உலவும் ஒரு "ஓரின சேர்க்கையாளர் "குழுவான "சிஸ்டேர்ஸ் கேங் கிடம் அவ்வபொழுது மாட்டி குதப் புணர்ச்சிக்கு ஆளாகிறார்.
வாய்ப் புணர்ச்சிக்கும் ஆளாக்கப்படுகிறார்.
(இது பாக் என்பவனும் ரூஸ்டர் என்பவனும் ஆண்டி டூப்ரேனை மிரட்டுகையில் ஆண்டி சொல்லும் வசனம்,
"I hear the bite reflex is so strong they have to pry the victims jaws open with a crowbar".
பாக் தனக்கும் ரூஸ்டரின் ஆணுறுப்புக்கும் ஆண்டி வாய்புணர்ச்சி தரா விட்டால், அவன் காதில் எட்டங்குல திருப்புளியை சொருகுவேன் என்கிறான், அதற்கு ஆண்டி , நான் அந்த சூழலில் உன் ஆண்குறியை கடித்துவிடுவேன், அப்படி கடித்தபடி என் உயிர் போய்விட்டால் , என் மண்டையை கடப்பாறையால் பிளந்தால் தான் உன் ஆண்குறியை மீட்க முடியும், இதுவே அறிவியல் ரீதியான உண்மை என்கிறான் , அது தான் crow bar ன் பதம். )
ஒரு சமயம் இவர் அவர்களை எதிர் தாக்குதல் செய்தும் பயனின்றி கடுமையாக தாக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற.இவர் மேல் மட்டும் மனிதாபிமானம் கொண்ட சிறை அதிகாரி "ஹாட்லீ" அந்த "சிஸ்டேர்ஸ் கேங் " தலைவன் "பாப்" ஐ அவன் இருக்கும் வெளிச்சமில்லா சிறைக்கு சென்று இரும்புத்தடியால்.அடித்து நொறுக்கி அவன் மொத்த உடம்பையே செயலிழக்க செய்து நடை பிணமாக்கி மாநில மருத்துவமனைக்கு அனுப்புகிறார்,
அதன் பின்னர் சிறையில் இவருக்கு செல்வாக்கு கூடுகிறது.அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது.இவர் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல்,இதர விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல்,இலவச வரி ஏய்ப்பு சட்ட உதவி என்று இரவு பகல் பாராமல் பணி செய்து தர,இவருக்கு தனி அறை,நூலகர் பதவி.சிறையின் வார்டன் "norton"இன் கணக்கு வழக்கை பார்க்கும் வேலை,மற்றும் அளவுக்கு அதிகமான சேமிப்பு பொருட்கள் (personnel items)வைத்துக்கொள்ள அனுமதி என கிடைக்கிறது.
காலம் உருண்டோடுகிறது. இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "மர்லின் மன்றோவின் " "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.இவர் சிறை நூலகத்திற்கு உதவி கேட்டு அரசு மற்றும் இதர மாகான நூலகங்களுக்கு சிறை அதிகாரியின் அனுமதியுடன் வாரத்திற்கு ஆறு கடிதங்களாவது எழுத ,அவருக்கு மலை போல பழைய புத்தகங்கள் இசைத்தட்டுகள் மற்றும் பண உதவிகள் வந்துசேர்கின்றன.சிறையில் நூலகத்தை அருமையாக நிர்மாணித்து பாராட்டுக்களும் விருதுகளும் பெறுகிறார்.
அப்படி இவருக்கு ஒரு நாள் ”The Marriage of Figaro,” என்னும் ஒபேரா இசைத்தொகுப்பு தபாலில் வர ,அதை ஒலிபரப்ப கிராமபோன் நார்ட்டன் ரூமில் மட்டுமே இருக்க அங்கே சென்ற இவர். சிறை அதிகாரிகள் கழிவறை செல்ல கதவை மூடி தாழிடுகிறார்.பின்னர் அதை ஓடவிட்டு மெய்மறந்து கேட்கிறார்.அதை சக சிறைக்கைதிகளும் கேட்டு மெய்மறக்கவேண்டும் என விரும்பியவர் அதை ஒலிபெருக்கியில் ஒலிபரப்ப,எல்லா சிறைக்கைதிகளும் உற்சாகமடைந்து நிலைகுத்தி நின்றுவிடுகின்றனர். ரெட்டிற்க்கோ மிகவும் கவலை,சிறை அதிகாரிகள் கோபமடைந்து இவரின் வார்டனின் அறைக்கதவை தட்ட, இவர் துணிந்து அதை திறக்கவில்லை,வாங்கப்போகும் அடியை பற்றியும் கவலைப்படாமல் அந்த இசைத்தொகுப்பு முடிந்தவுடன் கதவை திறக்க இரும்புத்தடியால விளாசி எடுக்கப்படுகிறார். அந்த சம்பவம் மூலம் இவர் மாபெரும் நெஞ்சுறுதி கொண்டவர் என அனைவருக்கும் புலப்படுகிறது.
இதற்கிடையில் சிறை வார்டன் "norton" சிறைக்கைதிகளை அரசு பொதுப்பணித்துறையில் வேலைக்கு அனுப்பி,அதில் பெரும் பங்கை ஒப்பந்த தாரர்களிடமிருந்து லஞ்சமாக பெறுகிறார்.
அதற்கும் இவரே கணக்கர்."randel stephens" என்னும் பெயரில் தானே கையொப்பமிட்டு ஒரு பொய்க் கணக்கை ஆரம்பித்து (அதற்க்கு போலி ஓட்டுனர் உரிமம் ,போலி பிறப்பு சான்று தரப்படுகிறது)அதில் வரி ஏய்ப்பு செய்து லஞ்சப் பணத்தை கணக்கு வைத்து தினமும் டெபாசிட் செய்யப்படுகிறது.வார்டனுக்கு இவனின்றி ஒரு அணுவும் அசையாமல் போகிறது.இருந்தும் அந்த கொடுங்கோல் வார்டன் இவரிடம் தன் ஷூவுக்கு கூட பாலீஷ் போட்டு வாங்கிக்கொள்கிறார்.அவ்வப்பொழுது தன் கோட்டு சூட்டுகளையும் துவைத்து அயன் செய்து வாங்கிக் கொள்கிறார்.
நாட்கள் உருண்டோட 1965 ஆம் வருடம் ,
இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி ""raquel welch"இன் "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.துடிப்பான இளம் திருட்டு குற்றவாளி "tommy williams" என்பவன் சிறைக்கு வருகிறான்.இவரிடம் நட்புடன் பழகுகிறான்.தன் கர்ப்பிணியான காதலியை விட்டு வந்தவன் இனி திருந்தி வாழ்வது என்ற முடிவில் ,இவரிடம் தனக்கு கல்வி கற்றுத்தரச் சொல்லும் படி கேட்டு ஆர்வமாக படித்து பரிட்சையும் எழுதுகிறான்.
ஒரு நாள் சக சிறைக்கைதிகளுடன் பேசிக்கொண்டிருக்கையில் டூப்ரேன் சிறைக்கு வந்த காரணத்தை கேட்க ,ரெட் சொன்னவுடன் கேட்டு அதிர்கிறான்.தன் முன்னாள் சக சிறைக்கைதி "எல்மோ ப்ளாட்ச்" என்பவன் தன்னிடம் குடித்து விட்டு தான் செய்த கொலை ,கொள்ளை கற்பழிப்புகளை பற்றி பெருமை பொங்க விவரிப்பான் என்றும்,அவன் கிளப் காவலாளியாக இருந்த போது அறைகதவை உடைத்து உள்ளே சென்று அங்கே சல்லாபம் செய்து கொண்டிருந்த கள்ளக் காதலர் இருவரை பணத்திற்க்காக சுட்டுக் கொன்றதையும்,அதில் ஒரு வங்கி அதிகாரி மாட்டிக்கொண்டதையும் விவரித்ததை சொல்கிறான்.டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.இதை அனைவரும் டூப்ரேன் வந்ததும் சொல்ல இவருக்கு தலை சுற்றுகிறது. பத்தொன்பது வருடங்கள் கழிந்த பின்னா?இந்த செய்தி வர வேண்டும் என்று கண்ணீர் விடுகிறார்.
நம்பிக்கையுடன் சிறை வார்டன் "நார்டனிடம்" சென்று உண்மைகளை விளக்கி தனக்காக பரிந்துரை செய்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உதவுங்கள் என்று கெஞ்சுகிறார்,அவரோ சிறிதும் ஆர்வமில்லாமல்,அவன் சின்ன பையன் எதோ உளருகின்றான்.அதை நம்பாதே.இன்றைய கணக்கை எழுது. என்று ஏவ,இவர் ஆத்திரமாகி கத்த,அவர் உன் நிலைமை மறந்து பேசாதே என்று மிரட்டுகிறார்.இவன் மேலும் அவரிடம் என்னை வெளியே விட்டால் உங்களைபற்றியும் உங்கள் பினாமி பணம் பற்றியும் மூச்சு கூட விட மாட்டேன் என்று சத்தியம் செய்து கெஞ்சுகிறார்.
நார்டன் கடும் சினத்துக்கு உள்ளாகி,பணம் என்னும் சொல்லை இனி ஒரு முறை உச்சரித்தால் டூப்ரேனை தான் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் ,டூப்ரேனை ஒரு மாதம் தனிமையான இருட்டு சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.இதற்கிடையில் இளம் சிறைக்கைதி "tommy williams" க்கு பரீட்சை முடிவுகள் வருகிறது,தொலை தூர பள்ளி இறுதியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழும் வருகிறது.இவருக்கு இருட்டு சிறைக்கு சாப்பாடு வருகையில் இந்த செய்தியும் வர இவர் மகிழ்ச்சியில் உயரே பறக்கிறார்.
வாழ்வில் தான் கூட ஒரு நல்ல விஷயம் சாதித்து விட்டதாக பெருமை கொள்கிறார்.அன்று இரவே டாம்மி வில்லியம்ஸை வார்டன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி ,சிறை காம்பவுண்டுக்கு வெளியே கூட்டிவரச் செய்து அவனுக்கு அன்பான வார்த்தைகளை பேசி ,இவனுக்கு சிகரட் கொடுத்து பற்ற வைத்து ,இவன் டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொன்னது உண்மையா?அதை எங்கு எந்த கோர்ட்டில் கேட்டாலும்,எந்த நீதி பதி முன் கேட்டாலும் சொல்ல முடியுமா?பின் வாங்க மாட்டாயே?என்று கேட்க,இவன் அவ்வளவும் கடவுள் மேல் ஆணையாக உண்மையே!!,
அதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்ல தயாராக இருக்கிறேன் என்று சொல்ல,இவர் ஆர்வமாக அவனை தட்டிகொடுத்து ரொம்ப மகிழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே மேலே பாதுகாப்பு கோபுரத்தில் நின்ற சிறை காவலாளிக்கு கண்ணைக் காட்ட,இவனை அவர்கள் சரமாரியாக சுட்டு கொல்கின்றனர்.
மறுநாள் டூப்ரேன் இருட்டு சிறைக்கு வார்டன் வந்து "tommy williams" சிறையில் இருந்து தப்பிக்கும் போது காவலர்கள் சுட்டதில் இறந்து விட்டான்,என்று சொல்ல ,மேலும் இவன் தன்னிடம் பழையபடி வந்து கணக்கு எழுதினால் தொடர்ந்து தனி அறை,பாதுகாப்பு, நூலகர் பதவி,கிடைக்கும்,இல்லையேல் மரண அடி,குதப்புணர்ச்சி, கக்கூசு கழுவும் வேலை,இவன் நூலகம் கொளுத்தப்படும் ,என்று மிரட்ட ,இவர் பூனையாக பதுங்குகிறார்.பாய சந்தர்ப்பம் பார்க்கிறார்.
பழையபடி நார்ட்டனிடம் கணக்கு எழுதும் வேலை செய்கிறார் ,நாற்பது வருடங்களை சிறையில் கழித்த தன் நண்பன் ரெட்டிடம் பேசுகையில் தான்
இந்த சிறையை விட்டு வெளியேறினால் மெக்சிகோவின் அருகே உள்ள "zihuantanejo"என்னும் கடற்கரை கிராமத்தில் போய் நிரந்தரமாக தங்கி உல்லாசக்கப்பலுடன் ஓட்டல் வைத்து பிழைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்று சொல்ல ,ரெட் சிரிக்கிறார், அது ஒரு போதும் நடவாது,நம்பிக்கைகளே வீண். அது ஒரு மணல் கோட்டை எளிதில் தகர்ந்து விடும் என்று சொல்கிறார்.இவர் பயம் மனிதனை சிறை வைக்கும் , வாழும் போதே கொன்று விடும்.ஆனால் நம்பிக்கை ஒருவனை சிறையில் இருந்து விடுதலை ஆக்கிவிடும் என்று கூறுகிறார் .
மேலும் நீ எப்போது விடுதலை ஆனாலும் "பக்ஸ்டன்"என்னும் ஒரு ஊர் நீ சென்றிருக்கிறாயா? அந்த சிற்றூரில் வடக்கே சென்றால் ஒரு வயல் வரும்,அதில் உள்ளே நடந்து போனால் தனியாக ஒரு பெரிய மரம் காணப்படும்,அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டிச் சுவர் உண்டு ,அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று இருக்கும்,பளபளப்பை வைத்து நீ அதை உணர்வாய்.
அதை தூக்கி பார்த்தால்,ஒரு சிறிய பெட்டி இருக்கும்.அதை திறந்து பார், உனக்கு எல்லாம் புரியும் அதன் பின் நீ "zihuantanejo" அவசியம் வரவேண்டும். வந்து விடுவேன் என்று இந்த நண்பனுக்கு சத்தியம் செய் என்று ,சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.இவர் அதை ஏற்கவில்லை, ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இருக்கும் ஒருவனின் வார்த்தைகளின் வெளிப்படாகேவே கருதி விட்டு நகர. அன்று வழக்கம் போல சிறை வார்டனுக்கு கள்ளக்கணக்கு எழுதுகிறார்.
இவரிடன் வார்டன் தன் ஷூவிற்கு நன்கு பாலீஷ் போட்டு வைக்கும் படியும்,தன் கோட்டு சூட்டுகளை நன்கு அயன் செய்து வைக்கும் படியும் சொல்லிவிட்டு ,இவரிடமிருந்து கணக்கு புத்தகத்தை (அது ஒரு பைபிளின் அட்டையைக் கொண்டிருக்கும்)வாங்கி கூடவே இவர் தந்த சில காகிதங்களுடன் இவரை தன் முன்னாலே பெட்டகத்துக்கு உள்ளே வைக்க விட்டு பூட்டிவிட்டு தன் மனைவி வரைந்த பெயிண்டிங்கை பெட்டக கதவை மறைத்து பழைய படி மாட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார்.
டூப்ரேன் நினைத்தபடி விடுதலையானாரா?
நாட்ட்டனுக்கும் ஏனைய கொடுங்கோல் சிறைஅதிகாரிகளுக்கும் என்ன ஆனது?
40 வருடங்களை சிறையில் கழித்த ரெட் விடுதலை ஆனாரா?
போன்றவற்றை படத்தில் பாருங்கள்,முழுதும் படிக்க எண்ணுபவர் தொடர்ந்து படியுங்கள்
=============0000==============
டூப்ரேன் ஷூவுக்கு ரொம்ப நேரம் பாலீஷ் போட்டு மெருகேற்றுகிறார். வார்டுரோபை திறந்து கோட்டு சூட்டுகளை தடவிப் பார்க்கிறார்.ரெட் இரவு உணவு நேரத்தில் சக கைதிகளுடன் உணவருந்த டூப்ரேன் மட்டும் காணவில்லை,அதில் சக கைதி டூப்ரேன் தன்னிடம் ஆறடி நீளமுள்ள தாம்புக்கயிறு கேட்டதாகவும் தான் தந்ததாகவும்,ஏன்? என்று தெரியாது என்றும் சொல்ல ,ரெட்டிற்கு எங்கோ பொறி தட்டுகிறது.தன் மனதில் டூப்ரேன் தூக்கு மாட்டிக்கொள்வாரோ என பயப்படுகிறார்.ஆனால் இவரால் என்ன செய்துவிடமுடியும்?இந்த கொடிய நரகத்திலிருந்து விடுதலையா தரமுடியும்?
இரவு எல்லோரும் அவர்கள் அவர்களின் சிறை கூடங்களுக்கு திரும்ப பெயர் வாசிக்கப்படுகிறது,இவர் பெயர் பதிவாகிறது,இரவு ரோந்து அதிகாரி வந்து ஒவ்வொரு அறையை சோதனையிட்டு பெயர் பட்டியல் சரிபார்க்கின்றனர் ,இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது. மறுநாள் இவரின் சிறை அதிகாரிகள் கைதிகளின் பெயர் படிக்க அனைவரும் வெளியே வந்து அட்டன்டன்ஸ் கொடுக்கின்றனர். இவர் பெயர் படிக்க,இவரின் அறையிலிருந்து குரலே இல்லை.அதிகாரிகள் கீழிருந்த படி மிரட்டி வெளியேறுமாறு சொல்ல ,இவர் வரவில்லை,
பொறுமை இழந்த அதிகாரிகள் சிறை கதவை திறந்து பார்க்க அதிர்கின்றனர்.ஒரு ஆள் வெளியே போனதற்க்குறிய எந்தஒரு சுவடும் இல்லாமல் தப்பித்திருக்கிறார். எப்படி? யாருக்கும் எதுவும் விளங்கவில்லை. விஷயம் கேள்விப்பட்டவுடன் வார்டனுக்கு பேதியே ஆகி விட்டது .தம் காதுகளையே நம்பாமல் நேரில் வந்து இவரது அறைக்கு வந்து வியர்த்துப்போய் ஒவ்வொரு பொருளாக துருவிப் பார்க்கிறார்,அங்கே சில கருங்கல் வேலைபாடுகளும்,அழகிகள் போஸ்டரும்,சில புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.கருவுகிறார்,துடிக்கிறார்.குய்யோ முறையோ என கத்துகிறார். எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் பறக்க டூப்ரேன் எனக்கு உயிருடன் வேண்டும் என்று கருவுகிறார்.
எப்படியடா?ஒரு மனிதன் ஒரு ”குசு” போல காற்றில் கரைய முடியும்? என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றவர்,அங்கு இருந்த அழகியின் போஸ்டரைப் பார்த்து உனக்கு ஏதேனும் தெரியுமா?என்று கேட்டு,கல் சிற்பத்தை எடுத்து அந்த போஸ்டரை அடிக்க ,அது போஸ்டரைக் கிழித்துக்கொண்டு உள்ளே சென்று விடுகிறது,இவர் அரண்டு போய் அந்த போஸ்டரை கிழித்து ஏறிய,அங்கே ஒரு ஆள் மட்டுமே நுழையக்குடிய 2அடி விட்டத்தும் குறைவான ஒரு துளை,அந்த ஆறு அடி கணம் கொண்ட சுவற்றில் இருக்க இவர் ஆடிப்போகிறார். இந்த டூப்ரேன் என்னும் பூனையா இதையெல்லாம் செய்தது? அடக்கடவுளே, இயேசப்பா என்கிறார்.
அங்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரெட் டூப்ரேன் எப்படி தப்பியிருக்கக்கூடும்? என்று மனக் கண்ணிலேயே காண்கிறார்.ஐயோ அற்புதம்,விவரிக்க வார்த்தை போதவில்லை.என்ன நெஞ்சுரம்.?என்ன விவேகம்,? பத்தொன்பது வருடம் சுவற்றை சிறிது சிறிதாய் குடைந்திருக்கிறார், அன்றாடம் அந்த குடைந்த மண்ணை தன் ஜீன்ஸ் பேண்டின் கால் மடிப்புகளில் கொட்டி அதை வெளியே கொண்டு போய் தள்ளி இருக்கிறார். வார்டனின் அறைக்கு சென்று கணக்கெழுதும் போது,வங்கி பாஸ் புக்கிற்கு பதில் வேறு ஒரு வெற்று அட்டையும் (தோல் உறை இட்டது) தடித்த கணக்கு புத்தகத்திற்கு பதிலாக தான் உபயோகிக்கும் பைபிள் ,ஆறு வங்கி காசோலைகளுக்கு பதிலாக,வேறு சில காகிதங்கள் என்று.லாவகமாக வார்டன் அவசரமாக பெட்டகத்தை பூட்ட எத்தனிக்கும் போது, அசல் புத்தகங்களை தன் முதுகுப் பக்கம் பேன்ட்டில் சொருகிக்கொண்டு ,போலி புத்தகங்களை அவர் கண் முன்னே வைப்பது போல பாவனை செய்து..அடடா.?
அதன் பின்னர்,பாலீஷ் போட்ட ஷூவை அணிந்துகொண்டு,அவரை வெறுப்பேற்ற தன் ஷூவை அந்த ஷூ அலமாரியில் வைத்துவிட்டு ,தன் சிறை கைதி உடைக்குள் கோட் ,சூட்டுகளை அணிந்து கொண்டு தன் அறைக்கு பூனை போல வந்து தூங்கிய டூப்ரேன்,
பலத்த இடியுடன் மழை வரும் போது எழுந்து,ஆறடி கயிறும் பிளாஸ்டிக் பையும் கொண்டு,தன் பாஸ் புக்,மற்றும் காசோலைகள்,தான் வடித்த செஸ் போர்டும் ,காய்களும் ,எடுத்துக் கொண்டு காலில் கட்டிக் கொண்டு ,திறம்பட அந்த மிகச்சிறு துளைக்குள் பாப்புபோல ஊர்ந்து.நான்கு மாடிகள் சுமார் 60 அடிகள் உயரம் வழுக்குகின்ற கழிவுநீர்குழாய் பிடித்து இறங்கியவர் ,கீழே ஆற்றில் போய் கலக்கும் இரண்டடி விட்டம் கொண்ட ஸ்டோன் வார் கழிவுநீர் குழாயை அடைந்து, மழையில் இடி இடிக்க காத்திருந்து பலத்த இடி இடிக்க, டூப்ரேன் பெரிய கல்லை கொண்டு கழிவுநீர் குழாயை உடைக்க அது உடையாமல் போக. ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் இடிக்க ஆரம்பிக்க.
மூன்றாவது இடிக்கு காத்திருந்து பலம் கொண்டு கழிவுநீர் குழாயை உடைக்க ,அது உடைந்து கழிவு நீர் இவர் முகத்தில் கொப்பளிக்கிறது,பின்னர் அந்த கொடிய துர்நாற்றம் கொண்ட சாக்கடை குழாய்க்குள் இறங்கி மலம் நாற்றம்,சேறு,அருவருப்பு எதை பற்றியும் கவலை படாமல்,ஒரு மைல் தூரம் ஒரு பெருச்சாளி,கரப்பாம் பூச்சியைப்போல ஊர்ந்தவர்.கழிவுநீர் ஆற்றில் கலக்குமிடம் வந்ததும் ஆற்றில் குதித்து , கொட்டும் மழையில் நனைந்து சுதந்திர தாகம் தீர மழை நீரை குடிக்கிறார்.அங்கேயே சிறை சீருடையை அவிழ்த்து வீசிவிட்டு அகல்கிறார்.
மறுநாள் போலீஸ் தேடும் முன்னரே ஆறு வங்கிகளிலும் சென்று கணக்கை முடித்துக் கொண்டு ,பணம் சுமார் 3,70,000 டாலர்களை எடுத்துக் கொண்டு ,ஒரு வங்கியில் ,ஜெயில் அதிகாரியின் கள்ளக் கணக்கு பேரேடு புத்தகத்தை "the portland"என்னும் நாளிதழுக்கு அனுப்பி விட சொல்லி விட்டு அகல்கிறார்.
வங்கி ஊழியர்களும் உடனே அதை அனுப்ப போர்லாண்ட் அதை தலைப்பு செய்தியாக்கி மறுநாளே வெளியிடுகின்றனர்,
அது "irs"மற்றும் "fbi" வசம் வலுவான குற்றமாக விசாரிக்க சொல்லி முடுக்கிவிடப்பட்டு காவல்துறை,வருவாய் துறை அதிகாரிகள் சிறையை நோக்கி புறப்பட்டு வந்து,சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் ஹாட்லி மற்றும் ஏனையோரை கையோடு கைது செய்கின்றனர்,பின்னர் வார்டன் நார்ட்டனின் அறையை நோக்கி அவர்கள் வர.வார்டன் முன்பே நாழிதழில் வெளியான செய்தியை படித்திருந்த படியால்,தயாராக இருந்தார்.தன் கைத்துப்பாக்கியை லோடு செய்தார்.கடைசி ஆசையாக அந்த லாக்கரில் என்ன தான்? உள்ளது என பார்க்க திறக்கிறார்,டூப்ரென் அந்த லாக்கரில் தான் உபயோகித்த பைபிளில் அந்த ஜாக் ஹாம்மரை புதைத்து பாதுகாத்து வந்திருக்கிறார்.
பைபிளின் அட்டையில் இனி இது நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்து கம்பிக்கு பின்னே படிக்க உதவும்,என்று டூப்ரேன் எழுதியிருக்கிறார்.தன் வேலை முடிந்ததும் டூப்ரேன் அதை வார்டனுக்கே கொடுத்து வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார். வார்டனுக்கோ அவமானத்தால். முகம் கருத்தது. வார்டன் நார்ட்டன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை. நாற்காலியில் வந்து அமர்ந்தார்.தான் எடுத்த பெயரை கவுரவத்தை இனி ஒரு போதும் திரும்ப வாங்க முடியாதென்று தெரிந்து கொண்டார்.வெளியே அதிகாரிகள் கதவை தட்டஇவரின் பேரை சொல்லி மிரட்ட.நார்ட்டன் துப்பாக்கியை தன் தாடைக்கு கீழே அழுத்தி ட்ரிக்கரை அழுத்த மூளை வெடித்து கண்ணாடி சன்னலையும் உடைத்து தோட்டா வெளியேறுகிறது. ரெட் வாய்ஸ் ஓவரில் சொல்லுகிறார். துளைத்து வெளியேறியது தோட்டா அல்ல ..ஆண்டி டூப்ரேன் என்னும் மாமனிதனின் நம்பிக்கை தான்.
சிலநாட்களில் ரெட் பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் விடுதலை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டவர். விரக்தியுடனும் திமிராகவும் தான் சிறையில் அனுபவித்த தண்டனை தனக்கு திருந்த வாய்ப்பு அளித்தது என்னும் உண்மையை வஞ்சப்புகழ்ச்சியாய் உரைக்க ,அரண்டு போன அந்த பரிசீலனைக் குழு இவருக்கு நிபந்தனையுடன் கூடிய பரோல் அளிக்கிறது.
இவர் மிக மகிழ்ச்சியுடன் சிறையை விட்டு வெளியேறுகிறார்,வழக்கமாக சிறை தண்டனை கைதிகள் வேலைக்கு அமர்த்தப்படும் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்கிறார்,அனுதினமும் முன்னாள் கைதி என்பதால் சூபர்வைசரால் அவமானப்படுகிறார்.சிறுநீர் கழிக்க கூட அனுமதியும் ஏச்சு பேச்சும் வாங்க வேண்டியிருக்க.தன் சிறை சகா தூக்கு மாட்டி செத்துப்போன அறையே தனக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதை நினைக்கிறார்..வெகுண்டு எழுகிறார்.தான் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறார்,அச்சம் தவிர்த்து எல்லை தாண்டுகிறார்.(பரோலில் வெளிவரும் கைதி எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்பது சட்டமாம் )டூப்ரேன் அப்போது தன்னிடம் சொன்னதும் தான் அவருக்கு செய்த சத்தியமும் நினைவுக்கு வர ஒரு திசை காட்டும் கருவியை பார்க்கிறார்,அதை வாங்கியவர்.நல்ல வேளை எனக்கு தூக்கு கயிறு வாங்க அவசியம் நேரவில்லை என சொல்லிக் கொள்கிறார்.டூப்ரேனின் நட்பு இவருக்கு கலங்கரை விளக்கம் போல தெரிகிறது.
பேருந்து பிடித்து டூப்ரேன் சொன்ன அந்த "பக்ஸ்டன்"என்னும் ஒரு சிற்றூர் சென்றவர்,வடக்கே செல்ல ஒரு வயல் வர ,அதில் உள்ளே நடந்து போக ,தனியாக ஒரு பெரிய மரம் காணப்பட ,மகிழ்ச்சியில் துள்ளியவர்.அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டி சுவர் இருக்க ,அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று தனித்துத் தெரிய ,பளபளப்பை வைத்து அதை எரிமலைக்கல் என ரெட் உணர,.அதை தூக்கி பார்த்தால்,ஒரு தகர பெட்டியும்,அதில் பிளாஸ்டிக் பையில் உள்ளே இவர் ரெட்டுக்கு எழுதிய கடிதமும்,இருநூறு டாலர் பணமும் இருக்கிறது ,தர தரவென கண்களில் ஆனந்த கண்ணீருடன் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள சுவரில் சாய்ந்து கொண்டவர் நாதழுதழுக்க கடித்தத்தை படிக்க,எல்லையில்லா ஆனந்தம் பீறிடுகிறது.
பணத்தை எடுத்துக் கொண்டவர் ஆவலுடன் நெடுந்தூர பயணமாக "zihuantanejo" செல்ல பயணச்சீட்டு எடுத்து பஸ் ஏறியவர். அந்த அழகிய கடற்கரை கிராமம் வருகிறார்.அங்கு ஒரு மைல் நடந்ததும் டூப்ரேன் தன் உல்லாச படகை நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து இவர் பொறுமையிழந்து கையசத்துக்கொண்டே மகிழ்ச்சிப்பெருக்கில் குரல் கொடுக்க,டூப்ரேன் உற்சாகமாகி ஓடி வந்து கட்டி தழுவிக் கொள்கிறார் ..ஆகா என்ன ஒரு படம்? என்ன ஒரு கதை,மிகவும் மெதுவாய் செல்லும் இந்த படம் எந்த புள்ளியில் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும்,டூப்ரேனின்,ரெட்டின் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைக்கிறது? உற்சாகம் கொள்ளச்செய்கிறது? சொல்ல முடியவில்லை.
இதை உலகின் சாகும் முன் நிச்சயம் பார்க்க வேண்டிய நூறு படங்களில் ஒன்றாக குறிப்பிட்டதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்றே தோன்றியது. மிகவும் அற்புதம்..இவர்களின் நடிப்புக்கு இணை என்று எதை அளவுகோலாய் காண்பிப்பது?உலகத்தரம்...இதில் குருதிப்புனலில் வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என்னும் வசனத்தை கேட்டேன். (சிறை அதிகாரி நார்டன் டூப்ரேனை தேட ஆளை அனுப்பும் போது சொல்லுவார்) நம் கமல் ஹாசன் அதை தன் குருதிப்புனல் படத்தில் அருமையாக பயன்படுத்தியிருப்பார்.
இப்படம் வெளியான 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட் திரை ரசிகர்களுக்கு விருந்தாக பல அருமையான படங்கள் வெளியானமையால் இப்படம் திரையில் வசூல் சாதனை செய்யாமல் போனது,ஆயினும் வீடியோ, சிடி, டிவிடி ப்ளூ ரே டிஸ்க் விற்பனையில் இப்படம் செய்த சாதனை அளவிடமுடியாதது. சிறந்த நடிகருக்காக மார்கன் ஃப்ரீமேன் அற்புதமான ஒளிப்பதிவுக்காக ரோஜர் டீக்கென்ஸ்,அழகான எடிட்டிங்கிற்காக ரிச்சர்ட் ஃப்ரான்ஸிஸ் ப்ரூஸ்,மனதை உருக்கும் இசைக்காக தாமஸ் ந்யூமேன், தயாரிப்பாளர் நிக்கி மார்வின்,சிறப்பு ஒலிப்பதிவுக்காக , சிறந்த திரைக்கதைக்காக ஃப்ரான்க் டாரபாண்ட் என எழு ஆஸ்கர் நாமினேஷன்கள் வாங்கியபோதும். ஒன்றிலும் விருது பெறவில்லை.நல்ல படங்கள் விருது பெறாமல் போவது அதிசயமில்லை என்பதற்கு இந்த படமும் சான்று!