Saturday, November 21, 2020

Middle Class

 நான் ரசித்த மிக அழகான பதிவு..


ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி


மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.


“பேஃனை ஆஃப்ப் பண்ணாமல் வெளியே போகிறாய்”


“ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை”


“பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்”


இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.


நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. 


இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


“வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.


நேர்காணலுக்குக் கிளம்பினான்.


“கேட்கிற கேள்விக்குத் தயங்காமல் தைரியமாக பதில் சொல், தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள்” என்று செலவுக்குக் கூடுதலாகப் பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.


நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.


கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. 


கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.


அதைச் சரி செய்து கதவை சரியாகச் சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.


 நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.


தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தார். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.


குழாயைக் கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படிப் போட்டுவிட்டுக் கடந்து சென்றான்.


வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.


நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.


“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். 


மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. 


“நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.


பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.


அதையும் வருத்தத்துடனேயே காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.


அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.


”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.


இளைஞர்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.


இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்குத் தெரியவில்லை. கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.


சர்டிஃபிகேட்டுகளை வாங்கிய அதிகாரி, அதைப் பிரித்துப் பார்க்காமலே, “நீங்கள் எப்போது வேலைக்குச் சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.


“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா?” என்று தெரியாமல் குழம்பி நின்றான் மகன். 


”என்ன  யோசிக்கிறீர்கள்?” என்று பாஸ் கேட்டார், 


“நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.


கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையைத் தெரிந்து கொள்வது கடினம்.


அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். 


இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.


 நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.


அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. 


அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாகத் தணிந்தது.


வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினான் மகன்.


அப்பா நமக்காக எது செய்தாலும், சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக மட்டுமே இருக்கும்!!!


உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்தப் பாறையும் சிலையாவதில்லை; வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.


நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால்தான்,


நாம் காலரை தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக  பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே. 


தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லித் தூங்க வைப்பாள்.


ஆனால் தந்தை அப்படியல்ல


தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கிக் காட்டிக் கொண்டு போவார்.


ஒரு சொல் கவிதை அம்மா!


அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா!!


தாய் கஷ்டப்படுவதைக் கண்டுபிடித்து விடலாம். 


தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லித்தான் கண்டுபிடிக்க முடியும்.


நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக, பாதுக்காவலராகத் தெரிகிறார்.


தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தைக்  கடத்தி விடுவாள்.


அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தந்தை தனி மனிதன்தான்.


*எனவே தாயோ, தந்தையோ  உயிருடன் இருக்கும் போது உதாசீனப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை*


வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...